தலையாலேயே கைலை மலை ஏறிவரும் அம்மையை கண்டு வியப்படைந்த உமை அன்னை ஈசனை நோக்கி இவ்வாறு விகார ரூபத்துடன் தன்னை இவ்வளவு வருத்திக்கொண்டு இங்கு நம்மை நோக்கி வரும் இந்த அம்மை யார் ? என்று வினவ ஐயன் இந்த அம்மையார் நாம் இருக்குமிடம் புனிதமென்று கால் படாதவாறே வருகிறார் . இவள் கணவன் இவளை தெய்வமாக மதித்த காரணத்தால் அவரை பிரிய நேர்ந்த இவர் அவருக்கே உரிமையான தன் அழகிய ரூபத்தை தியாகம் செய்து இந்த விகார ரூபத்தை வேண்டி பெற்ற பதிவிரதா சிரோன்மணி என்று அவளை வருணித்த இறைவன் 'அம்மையே ' என்று மிக அன்புடன் அவளை வரவேற்றார் . அவளும் அப்பா என்று மனம் குழைய அவர் காலில் விழுந்தாள் .' உமக்கு வேண்டியது என்ன ' என்று ஐயன் வினவ , அவள் ' பிறவாமை வேண்டும் . அப்படி பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வே ண்டும் . இன்னும் வேண்டும் . நான் பாட நீ ஆடும்போது உன் அடியின் கீழ் நிற்க வேண்டுமென வரத்தையும் கேட்டாள் . அம்பலவாணன் ஆலங்காட்டில் அவ்வாறே காண்பாய் என்று வரமளிக்கிறார் . புனிதவதி அம்மையாரும் அவ்வாறே அவருடைய ஊர்த்துவ தாண்டவத்தை கண்டு பேரானந்தம் அடைகிறார் . பிறகு அவர் மீது பதிகங்கள் பல பாடி பிறகு சிவனடி சேர்கிறார் .
No comments:
Post a Comment