தந்தை அடிப்பதையும் பொருட்படுத்தாமல் அவன் பாலபிஷேகம் தொடர்ந்ததால் அவன் தந்தையின் கோபம் வெறியாக மாறியது . கண் மண் தெரியாமல் அவன் மண்குடங்களில் சேகரித்து வைத்திருந்த பாலை அவர் காலால் உதைத்து தள்ளினார் . அதுவரை தன்னை மறந்து ஈசன் மீது லயித்திருந்த விசாரசர்மன் திடுக்கிட்டு ஐயனுக்கான பாலை காலால் உதைத்த பாவ காரியத்தை மன்னிக்க முடியாமல் பக்கத்தில் இருந்த குச்சியை எடுத்து ஒங்க அது மழுவாக மாறி அவன் தந்தையின் கால்களை வெட்டி அவரை சாய்த்தது . அப்போது ஈசன் அன்னையுடன் விசாரசர்மன் கையை பிடித்து அவனை அணைத்து கொண்டார் . என் பொருட்டு தந்தையை கொன்றாயே என்று சொல்லி இனி நானே உன் தந்தை என்று சொல்லி தன் கழுத்திலிருந்து கொன்றை மாலையை கழற்றி அவனுக்கு போட்டார் . இனி எம் திருத்தொண்டர்களுக்கு நீயே தலைவன் யாம் உண்ட அமுது எமக்கு படைக்கப்படும் எல்லாம் உம்மையே சேரும்படி சண்டேஸ்வர பதவி உனக்கு அளிக்கிறோம் என்று அனுகிரகித்தார். அவன் தந்தைக்கும் கால்கள் வரச்செய்து சிவபதம் அளித்தார் . பல சிவாலயங்களில் உத்சவத்தின் போது பஞ்ச மூர்த்திகளாக ஈசன் அன்னயுடன் ஐந்தாவது மூர்த்தியாக இவரும் வீதிவலம் வருவதை காணலாம் .
Sunday 25 February 2018
Saturday 24 February 2018
மறுநாள் எச்சதத்தன் மகன் ஆவினங்களை மேய ஒட்டி செல்லும்போது அவன் அறியாதவாறு அவனை பின்தொடர்ந்தார் . விசாரசர்மன் சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய அமர்ந்தான் . அவன் தந்தை அவன் அறியாதவாறு ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து அவனை கவனித்தார் . வழக்கம்போல் தன்னிச்சையாக பசுக்கள் பாலை சொரிந்தன . மண் பாண்டங்களில் அப்பாலை ஏந்தி லிங்கத்திற்கு தன்னை மறந்து அபிஷேகம் செய்ய தொடங்கினான் . இதை கண்ட எச்சதத்தன் எல்லை இல்லா கோபத்துடன் பாலை இவ்வாறு மணலில் கொட்டி வீணடிக்கிறாயா ? என்று கத்திக்கொண்டு ஒரு குச்சியை எடுத்து அவனை அதனால் விளாசினார் . ஆழ்ந்த பக்தியில் இருந்த அவன் இவை எதையும் உணரும் நிலையில் இல்லை .
Friday 23 February 2018
இவ்வாறு விசாரசர்மனின் சிவஆராதனை தொடர்ந்தது . அவன் மனமும் ஆனந்தம் அடைந்தது . வழக்கமாக பசுக்களும் இவன் பாலபிஷேகத்திற்கு தேவையான பாலை இவனுக்கு அளித்துவிட்டு சொந்தக்காரர்களுக்கும் வஞ்சனையின்றி பால் பொழிந்தன . அப்போது ஒருநாள் துரதிஷ்டவசமாக ஒருவன் விசாரசர்மன் மணல் லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதை பார்த்துவிட்டு சிறுவன் பாலை வைத்துக்கொண்டு விளையாடுவதாக எண்ணி அக்கிரகாரத்தில் எல்லோரிடமும் இதை சொல்லிவிட்டு அவன் தந்தை எச்சதத்தனிடமும் முறையிட்டான் . அவரும் சிறுபிள்ளை தெரியாமல் செய்திருப்பான் . கண்டிக்கிறேன் என்று சொல்லி விட்டார் .
Wednesday 21 February 2018
இவ்வாறு விசாரசர்மனுக்கும் ஆவினங்களுக்கும் உள்ள பிணைப்பு வளர்ந்தது . பசுக்கள் அவனை உரசி நின்று அவன் தடவி கொடுக்கும் போது அவை தன்னை அறியாமல் பால் சுரந்தன . அதை கண்ட விசாரசர்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது . தன் இச்சையாக அவைகள் சுரக்கும் பாலமிர்தத்தை ஈசனுக்கு அர்ப்பணித்தால் என்ன என்று யோசித்தான் . உடனே அதை செயல் படுத்த முடிவு செய்தான் மண்ணியாற்றின் கரையில் ஒரு அத்தி மரத்தை கண்டான் . அதுவே தகுந்த இடம் என கருதி ஆற்று மணலில் ஒரு லிங்க வடிவம் அமைத்து அவ்விடத்தை கோவிலாக்கினான் . பசுக்கள் தன்னிச்சையாக சொரியும் பாலை எடுத்து வந்து தான் வடிவமைத்த ஐயனுக்கு பால் அபிஷேகம் செய்ய தொடங்கினான் . பக்தியும் ஆனந்தமும் பெருக்கெடுக்க அவன் இத்தெய்வீக பணியை தொடர்ந்தான் . இவன் பாலை எடுத்து இவ்வாறு கைங்கர்யம் செய்ததால் பசுக்களின் சொந்தக்காரர்களுக்கு எந்த வித குறையும் ஏற்படவில்லை . பால் அளவு அதிகமாயிற்று என்று சொல்லலாம் .
Monday 19 February 2018
இவனுடைய பராமரிப்பில் ஆவினங்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தன. இவனுடைய ஸ்பர்சித்திலேயே தன் கன்றுகளை கண்ட ஆனந்தம் எய்தி தங்களை அறியாமல் பால் சொரி ந்த ன . இவர் பராமரிப்பில் ஆவினங்கள் அதிகமாக பால் கொடுத்ததால் அக்கிரகாரத்து மக்கள் மகிழ்ந்து விசாரசர்மனை வெகுவாக புகழ்ந்தனர் . விசாரசர்மனின் ஐயன் மீது கொண்ட பக்தி வளர்ந்து கொண்டே இருந்தது.
Sunday 18 February 2018
விசாரசர்மன் அப்பசுக்களிடம் காட்டிய அன்பு அவன் ஈசனிடம் காட்டும் அன்பை போல் வியக்க வைப்பது . அவ்வுயிர்களிடமும் அவன் ஈசனை கண்டான் போலும் . அவ்வாவினங்களும் அவனிடம் அளவிலா அன்பை சொரிந்தன. அளவிலா பாலை சொரிந்தன . தினமும் அவன் அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு பாடசாலை சென்று அங்கு தன் அத்யயனம் முடித்துக்கொண்டு மாடுகளையும் கன்றுகளையும் திரட்டிக்கொண்டு மண்ணியாற்றங்கையில் செழிப்பான புல்வெளி நிறைந்த இடத்திற்கு ஒட்டி சென்று அவைகளை மேயவிடுவான் .
Wednesday 14 February 2018
ஒரு நாள் விசாரசர்மன் பாடசாலை மற்ற மாணவர்களுடன் செல்லும்போது அவன் கண்ட காட்சி அவனை வெகுவாக பாதித்தது . அக்கிரகாரத்து பசுமாடுகளை மேய்த்து செல்லும் சிறுவன் ஒரு கன்று முட்ட வந்ததால் கோபம் கொண்டு தன் கையில் இருந்த தடியால் துளியும் இரக்கமின்றி அதை அடித்து கொண்டிருந்தான் . பதறிப்போன விசாரசர்மன் அவன் கையிலிருந்து தடியை பிடுங்கி எறிந்து விட்டு அவனை கடுமையாக கண்டித்தான் . பசுக்ள் காமதேனுவின் வழிவந்தவை . தெய்வாம்சம் பொருந்திய வை வணக்கத்திற்கு உரியவை முட்டவந்தால் விரட்டி விடாமல் இப்படி அடிப்பாயா? என்று அவனை வெகுவாக கண்டித்தான் . ஆனாலும் அவன் மனம் சமாதானம் ஆகவில்லை . உடனே மறுநாள் முதல் பசுக்களை தானே மேய்க்க அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான் . அதை அடுத்த நாள் செயல் படுத்தவும் ஆரம்பித்தான் .
Tuesday 13 February 2018
திருசெய் ஞல்லூர் சோழநாட்டில் பழைமையான பெருமை வாய்ந்த திருத்தலம் . ஒரு கட்டத்தில் அந்நாட்டின் தலையாகராகவும் விளங்கிய தலம் . கந்தவேள் சூரபதுமனை வெற்றி வாகை சூடியதும் இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கிய தலம் . இவ்வாறு பெருமை பெற்ற இத்தலத்தில் நிறைய சைவ அந்தணர்கள் வாழ்ந்ததில் அதிசயமில்லை . அங்கு எச்சதத்தன் என்றொரு வேதியர் தன் மனைவி பவித்திரையுடன் வாழ்ந்து வந்தார் . அவர்களுக்கு ஈசன் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது . அக்குழந்தைக்கு விசாரசர்மன் எனப் பெயரிட்டு அருமையாக வளர்த்து வந்தனர் . அவன் பூர்வஜென்ம புண்ணியத்தால் வெகு சிறிய வயதிலேயே வேத சாஸ்த்திரங்கள் ஆகமங்கள் எல்லாவற்றிலும் அபார தேர்ச்சி பெற்று இருந்ததுடன் சிவபெருமானிடம் அபார பக்திகொண்டு விளங்கினான் .எப்போதும் அவர் சிந்தனையாகவே இருந்தான் .
Subscribe to:
Posts (Atom)