காழிப்பிள்ளை சென்ற இடமெல்லாம் மக்கள் அவரை குதூகலத்துடனும் பூர்ண கும்பத்துடனும் வரவேற்று பக்தியுடன் வணங்கி துதித்தனர் . திருப்பாச்சிலாச்சிராமம் வந்து சேர்ந்தார் சம்பந்தர். அவ்வூர் அரசன் கொல்லிமுழவன் அவன் அருமை மகள் முயலகன் என்னும் கொடு நோயால் பிடிக்கப்பட்டிருந்தாள் . அவள் தன் நினைவின்றி இழுத்துக்கொண்டு படுத்திருந்தாள் . பார்க்க பரிதாபமான நிலையில் இருந்தாள் . அரசன் எத்தனையோ வைத்தியங்கள் பார்த்தும் பலனில்லை . எந்த வைத்தியருக்கும் எதுவும் புலப்படவில்லை . மன்னரும் அவர் மனைவியும் மிக்க துன்பம் அடைந்திருந்தனர் . மன்னர் விரக்தி அடைந்து இனி மனித யத்தனம் வீண் என்று முடிவு செய்து ஈசனை சரணடைந்தார் . பெண்ணை சுமந்து கொண்டு கோயிலை அடைந்து ஈசன் காலடியில் அவளை கிடத்தினார் .
Friday 30 November 2018
Tuesday 27 November 2018
பிரம்மோபதேசம் முடிந்த பிறகு ஆளுடைப்பிள்ளைக்கு காவிரி இரு கரைகளிலும் உள்ள திவ்ய க்ஷேத்திரங்களை சேவிக்கும் ஆவல் எழுந்தது . அதை தந்தையிடம் தெரிவித்தபோது அவரும் சேர்ந்து கொண்டு புறப்பட்டார் . இந்திரன் அகலிகையிடம் தவறாக நடந்த காரணத்தால் அடைந்த சாபத்தை நீக்கி ஆயிரம் கண்கள் வழங்கிய கண்ணாயிரேஸ்வரர் கோவிலை சேவித்து கொண்டு புள்ளிருக்குவேளூர் திருப்புன்கூர் மற்றும் பல பல ஆலயங்களை தரிசித்து கொண்டு பதிகங்களை பாடிக்கொண்டும் மனம் மகிழ்ந்து பயணத்தை தொடர்ந்தனர் . கடைசியாக திருப்பாச்சிலாச்சிராமம் வந்தடைந்தனர் .
Monday 19 November 2018
இவ்வாறு இருக்கையில் சிவபாதவிருதயர்க்கு தன் மகனுக்கு உபநயனம் செய்து பார்க்க ஆவல் உண்டாயிற்று . அந்தணர்களை வரவழைத்து சுப முகூர்த்தம் நிர்ணயித்தார் . குறிப்பிட்ட நாளில் அந்தணர்கள் வந்து பிரம்மோபதேசம் நடந்தேறியது . தந்தைக்கு பேரானந்த ம் . குழந்தைக்கு வேதம் முறைப்படி உபதேசிக்க அந்தணர்கள் முற்பட்டபோது ஈசனும் அன்னையும் சேர்ந்து கொடுத்த ஞானபாலுண்ட அப்பெருமகனார்க்கு தாங்கள் கற்றுத்தர ஏதுமில்லை என்று உணர்ந்த அந்தணர்கள் அவரிடம் உபதேசம் பெற எண்ணினர் . அவரும் பஞ்சாக்ஷரத்திற்கு மிஞ்சிய வேறு மந்திரமில்லை என்று வலியுறுத்தி சொல்லி 'துஞ்சலும் துஞ்சல் ' எனும் பதிகம் பாடி அவர்களை மெய்மறக்க செய்தார் . அந்தணர்கள் மன மகிழ்ச்சியோடு அவரை தொழுது சென்றனர் .
Saturday 17 November 2018
அங்கிருந்து கிளம்பி பல தலங்களிலும் ஐயனை வணங்கி பதிகங்கள் பாடி மகிழ்ந்து திருசேய்நால்லூர் வந்தார் . சிவ அபராதம் செய்தவர் தந்தை என்றும் பாராமல் காலை வெட்டி மாய்த்து தண்டித்து அதன் காரணமாக ஐயன் இவரை மகனாக ஏற்று சண்டேஸ்வர பதவி அளித்து தந்தைக்கும் சிவபதம் அளித்த எம்பெருமானை வணங்கி துதித்து சீர்காழி வந்து சேர்ந்தார் . இத்தனை பெருமை பெற்று திரும்பி வந்த ஞான குழந்தையை மக்கள் எத்தனை பெருமையுடன் வரவேற்றிருப்பார்கள் என்று சொல்ல தேவை இல்லை . ஊர் எல்லையிலேயே மக்கள் மேளதாளத்துடனும் பூர்ண கும்பத்துடனும் பெண்கள் விளக்கு ஆரத்தியுடனும் அவர் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர் . ஆளுடைப்பிள்ளை மக்கள் அன்பை கண்டு நெகிழ்ந்து போனார் .
Thursday 15 November 2018
அரைத்துறைநாதரை கண்குளிர தரிசித்து தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து தன்மீது இத்துணை கருணை கொண்டு சிவிகை குடை மற்ற பொருள்களை அளித்த பெருமானை நெஞ்சார பாராட்டி பதிகங்களை பாடி மகிழ்ந்தார் சம்பந்தர் . நன்றி பெருக்கால் அங்கு சிலகாலம் தங்கி கண்குளிர சேவித்தார் . அவருக்கு ஞானப்பால் கொடுத்து பெற்றோர் ஸ்தானத்தில் தான் வணங்கும் தோணியப்பர் நினைவு வாட்டியது . அரத்துறை நாதரிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினார் .வழியிலுள்ள ஊர்களில் மக்கள் இத்தனை சலுகைகள் ஈசனிடமிருந்து பெற்ற அந்த ஞானக்குழந்தையை தரிசித்து வணங்க ஆலயங்களில் திரண்டனர் . சிவிகையை வலம்வந்து அவரை வணங்கினர் . அவர்கள் அன்பில் நெகிழ்ந்து போனார் சம்பந்தர் .
Saturday 10 November 2018
அரத்துறைநாதர் இரவு அந்தணர்கள் கனவில் தோன்றி புதல்வன் சம்பந்தன் தன் பிஞ்சு கால்கள் நோக தன்னை காண நடந்து வரப்போவதாகவும் அவன் பிஞ்சு கால்கள் நோவதை தாம் காண இயலாது . ஆகையால் அவருக்கு முத்து பல்லக்கும் குடையும் சின்னங்களும் அளிக்க விரும்புவதாகவும் அவைகளை மாறன்பாடி சென்று சம்பந்தனை அப்பல்லக்கில் அழைத்து வருமாறு ஆணையிட்டு மறைந்தார் . விடிந்ததும் அந்தணர்கள் கோவிலை அடை ந்தனர். கோவிலில் முத்து சிவிகையும் குடையும் மற்ற சின்னங்களும் அங்கு தயாராக இருக்க கண்டு ஆச்சர்யம் அடைந்தனர் . அவைகளை எடுத்துக்கொண்டு யாவரும் மாறன்பாடி அடைந்தனர் . ஈசன் கருணையை நினைத்து தந்தையும் மகனும் எண்ணி வியந்து மெய்சிலிர்த்தனர் . சம்பந்தர் பல்லக்கை வலம் வந்து வணங்கி அதில் ஏறினார் . அடியார்கள் சிவிகையை தாங்கி னர் . ஒருவர் குடை பிடித்தார் மறறொருவர் சின்னங்களை தாங்கி முன்னால் சென்றார் . இவ்வாறு நெல்வாயிலரத்துறையை அடைந்தனர் .
Wednesday 7 November 2018
நீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தரை தம் ஊரான எருக்கத்தம்புலியூர் அழைத்து சென்று அவரை அன்போடு உபசரித்து சுற்றியள்ள எல்லா திருத்தலங்களையும் சேவிக்க செய்தார் . அவர் பாடும் பதிகங்கங்களுக்கு கூட யாழ் வாசித்து மகிழ்ந்தார் . நெல்வாயில் அரத்துறை நாதரை தரிசித்துகொள்ள புறப்பட்டனர் . அதுநாள் வரை தந்தையின் தோளில் சுமக்கச்செய்து வந்து கொண்டிருந்த சம்பந்தர் இனியும் அவர்க்கு சிரமம் கொடுக்க விரும்பாமல் நடந்து பயணம் தொடர விரும்பினார் . நெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி எனும் இடம் நெருங்கும்போது சோர்ந்து போய் மேலும் தொடர முடியாமல் அங்கு தங்க முடிவெடுத்தனர் . எதிர்பாராமல் அவ்வூர் மக்களுக்கு அவர் தரிசனம் கிடைக்க மகிழ்ச்சி பொங்க அவரை வரவேர்த்தனர் . அரைத்துறைநாதர் தன் மகன் இவ்வாறு துன்ப படுவதை காண பொறுக்காமல் அவருக்கு முத்து சிவிகையும் குடையும் கொடுக்க இச்சை கொண்டார் .
Thursday 1 November 2018
சம்பந்தர் எம்பெருமான் ஆனந்த நடனம் புரியும் தில்லையில் தங்க மனம் வராமல் திருவேட்களம் சென்று அங்கு தங்கி அங்கிருந்து தினம் தில்லை வந்து ஐயனை சேவிக்கலானார் . ஒருநாள் தில்லையில் அவர் ஒரு அரிய காட்சி கண்டா ர் . ஒரு கணம் மூவாயிரவர் சிவகணங்களாக காட்சி தந்து மெயசிலிர்க்க செய்தனர் . கூட வந்த பெரும்பாணருக்கும் அக்காட்சியை காட்டி அதிசயிக்க செய்தார் . அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அன்று அங்கு பதிகம் பாடும்போது அவ்வதிசய காட்சியையும் பாடினார் . ஈசனை வணங்கி விட்டு செல்லும்போது பாணர் சம்பந்தர் காலில் விழுந்து வணங்கி அவரை தாம் பிறந்த ஊரான எருக்கத்தம்புலியூர் மற்றும் நிவா நதிக்கரை சுற்றியுள்ள மற்ற திருத்தலங்களை சேவிக்க அழைத்தார் . சம்பந்தரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார் .
Subscribe to:
Posts (Atom)